Friday, October 24, 2008

பொன்னானதன்றோ சனியும்! ஞாயிறும்!


கதை கதையாம் காரணமாம்
கல்யாண தோரணமாம்
தொலைக்காட்சி நெடுந்தொடரினிலே!

திங்களிலே தொடங்கிடுமாம்
வெள்ளிவரை தொடர்ந்திடுமாம்...
ஆயிரமாவது வாரமாம்!

பழிவாங்கும் எண்ணமதை
பண்பில்லா குணமதனை
போற்றியே சொல்கிறதாம்......

இன்றிறுதி வாரமாம்!
அவையாவும் தவறெனவே
சொல்லியே முடித்ததுவாம்!!

இத்தனை காலம்வரை
இல்லத் துள்ளோரெலாம்
புத்தியுள்ள கோமாளியாய்
மதியிழந்த அறிவாளியாய்
பொன்னான நேரமதை
வீண்செய்தே வாழ்ந்தனராம்....

மீண்டுமோர் புதிய
நெடுந்தொடர் தொடங்கியதாம்!
அன்னவர்தம் தொடர்கதையும்
தொடர்ந்து விட்டதுவாம்!!!

திங்கள்முதல் வெள்ளிவரை சனிக்காலம்!
பொன்னான தன்றோசனியும் ஞாயிறும்!!