Thursday, November 22, 2007

அந்நியன்!

" சுதந்திரம்" - இச்சொல்லை வாசிக்கையிலாவது
ரத்தம் சிந்திய நம்வீரர்களை
எண்ணியாவதுப் பார்த்திருக்கிறாயா?

தொலைக்காட்சியில் தேசியக்கொடி,
வானொலியில் தேசியகீதம்,
எழுந்தாவது நின்றிருக்கிறாயா?

பேசுவது ஆங்கிலமொழி,
பார்ப்பது ஆங்கிலப்படம்,
கேட்பது பாப் இசை,
சுவற்றிலோ மர்லின்மன்ரோ!

அந்நியக் கலாச்சாரம்,
அதற்கோர் புகழாரம்,

'தமிழ் எனக்கு வராது"
சொல்வதில் உனக்குப் பெருமிதம்,

செல்வது அயல்நாடு
திரும்பும் எண்ணமும் தோன்றாது!

அங்கு உனை ஈர்ப்பதென்ன?
இங்கு அதில் குறைவதென்ன?

அறிவாளிகள்?
திறமைசாலிகள்?
அன்பானவர்கள்?
அறிவியல் முன்னேற்றம்?

இவையா?
பணமா?

பணமென்றால்......
அங்கேயே நீ இருந்துவிடு!
இந்நாட்டிற்கு நீ அந்நியனாகிவிடு!




சிறை வாசம்!

சிறைவாசம் கண்டப் போதும்
வரலாறு படைத்தனர் அன்று!

காதலில் சிறைவாசம் கண்டு
வெட்டியாய்க் கழிக்கிறாய் இன்று!

அவர்கள் வரலாற்றைப்
படித்தாவதுப் பார்!

உன் வரலாற்றில்
அதாவது இருக்கட்டும்!

அன்பளிப்பு!

அழைப்பிதழில் என் முகம்..
அன்பளிப்பில் உன் முகம்!

கண்டுக் கண்டுக் களிக்கிறேன்!
உன்னன்பில் நான் மிதக்கிறேன்!

வியப்பு!

"'உன் நடனத்தில் வியந்தேன்
ஆடும் மயில் நீயெனன்று!

இசையில் உணர்ந்தேன்
நான் உன்
குரல் வசமென்று!

ஓவியமாக் கண்டேன்?
உன்சிந்தைக் கண்டேன்!

உன் கவிதைத்தமிழில்
உண்ணுள் உறைந்தேன்!"

...................
மொழியும் கலையும் இல்லையெனில்
மனிதர்க்கு உணர்வும் இல்லை...அதை
வெளிப்படுத்த வழியும் இல்லை..
........!!!!!

Wednesday, November 21, 2007

ஆர்வக் கோளாறு!

அன்றெனக்குத் திருநாள்!

உன்னழகு முகத்தைக்
கணினியில் பார்த்தாலே
பரவச மடைவேன்!
புத்துணர்வுப் பெறுவேன்!

" இன்றோ நேரில்....
என்னாவேனோ"...என்றிருந்தேன்!

உன்னைக் காண....விளையாட்டில்
உன்திறனைக் காண
ஓடோடி வந்தேன்!

கண்டேன்...வியந்தேன்!
மகிழ்ச்சிக் கடலில்
மூழ்கித் திளைத்தேன்!

சாதனைகள்பல நீ புரிந்தபோதும்
தீராத தாகம் எனக்கு!

வெற்றிக் கோப்பை
உன் கையிலா?
என் கையிலா?!
ஒன்றும் புரியவில்லை!

உன்னாலன்றோ
கோப்பைக்குப் பெருமை!

கோடிக்கும் பெருமை!

எனினும் இவை யிரண்டும்
உன்சிறுப் புன்னகைக்கு ஈடாகுமா?

நான் நேசிப்பது
விளையாட்டையா?
உன்னையா?

"விளையாட்"டென்றால்
அதன்மீது எனக்குக்
காதலாம்! ஆர்வமாம்!

'உன்னை" யென்றாலோ
ஆர்வக் கோளாறாம்!

உளறுகின்றனர்...
புரியாதவர்கள்!

கொள்ளை!

இசையிலெனை மறந்து
லயித்திருக்கும் பொழுதெல்லாம்....
அவன் குரலென்னை
திசைத் திருப்பும்!

நேசிக்கும் என்தமிழில்
உறைந்திருக்கும் பொழுதினிலும்...
என்கரம்பற்றி அவனோடு
இழுத்துச் செல்வான்!

அயர்ந்துறங்கும் வேளையிலாவது
இவன் என்னை
விட்டு வைக்கிறானா?!
அவன் முகத்தோடு
என்முகம் வைத்து
கதைப்பேசச் சொல்வான்!

தன் நண்பனிடம்
என் பெருமைப் பேசுவான்!
என்னையும் அவன்
தோழியாக்கிக் கொள்வான்!

பணிகளில் குறுக்கிடுவான்
தன்னாணைப் பிறப்பிப்பான்!

அதிகாரம் செய்வான்!
அடிமையாக்குவான்!

அடித்தாலும் என்னை
அணைத்தேக் கொல்வான்!
முத்தம்வாரி இறைப்பான்!

குறும்புகள் பலப்புரிந்தென்னைக்
கொள்ளைக் கொள்வான்!

எனையழைக்கும் மறுநொடி!
அவனருகில் நானிருப்பேன்!

அவனன்றி யாரழைப்பார்
என்னை..." அம்மா! வா இங்கே!

Tuesday, November 20, 2007

அடடா!

இடித்தால் சிரிக்கிறது வானம்!
பளிச்சென்று மின்னி!

அச்சிரிப்பில் உதிர்ந்த
ஆனந்தக் கண்ணீரில்
நனைகிறது பூமி!

மங்கை!

அன்றிவள் அடுப்படியில் கிடந்தாள்........
நேற்றிவள் விமானத்தில் பறந்தாள்...

இன்று விண்வெளியில் நடக்கிறாள்!
நாளைப்புதுக் கிரகத்தைக் கண்டறிவாள்!

இப்பூமியில் மங்கையிவள்
எவர்க்கும் சளைத்தவளல்ல!
எதிலும் சாதிப்பவள்!

கூண்டுக்கிளியல்ல இவள்..
உனக்குச் சிறகைக் கொடுத்தவள்!

சுமைத்தாங்குமிவள்
இடியையும் தாங்குவாள்!

தன்சுமைக்கூட
சுமக்கவியலா
வலுவற்றவனே!

இவளிடம் தஞ்சமடை!
நீயும் பலசாலியாகிவிடு!

Monday, November 19, 2007

கோழை!

கண்ணிருந்தும்
காட்சித் தெரிந்தும்
குருடனானவன்

உளமிருந்தும்
நெஞ்சுரமிருந்தும்
கோழையானவன்

உயர்வினிலும்
தாழ்வினிலும்
நிலைத்திடாதவன்

இறையளித்த
வாழ்வினில்
ஜெயித்திடாதவன்

ஜீவித்தால்
பூமிக்கு இவன்
பாரமா என்ன?

மரணித்தால்
மண்ணிற்கு இவன்
உரமா என்ன?

இவன்
இருந்தால் என்ன?
இறந்தால் என்ன?

தாமரையின் கோபம்!

என்னவனின் ஒளியை உண்டு
இரவிலுனைக் குளிரவைக்கும்
அவளை மட்டும்நீ பார்க்கிறாய்!

ஒளிதரும் என்னவனைப் பார்க்க
உன் கண்கள் கூசுகிறதா?

இதனால்தான்.....அவன்
என்னைக் குளிரவைத்து
உன்னைச் சுட்டெரிக்கிறான்!

ஒத்திகை!

அன்பைமட்டும் வாரி இறைத்த
என்னைப் போல் ஒருவள்
இன்று உன்னுடன் இருக்கையில்

நானெதற்கு என்று நினைத்துவிட்டாயா?
என்னன்பு மகனே?!

இப்படி எட்டி உதைக்கத்தான்
என்வயிற்றில் ஒத்திகைப் பார்த்தாயா?

அன்றுபோல் இன்றும் மகிழ்கிறேன்!
நீ மகிழ்ச்சியுடன் இருப்பதனால்!

வழுக்கி!

கல் தடுக்கி
மண்ணில் விழுந்தேன்
எழுந்தேன்

கால் வழுக்கி
சேற்றில் விழுந்தேன்
எழுந்தேன்

விதி வழுக்கி
வீதியில் விழுந்தேன்
எழுவேன்!
நிச்சயம் நான்
எழுவேன்!

பேதைமை!

" மனிதன் ரூபத்தில் கடவுளிருக்கிறான்"
என்றுரைக்கும் என் அன்பர்களே!
பின் அவனுக்குப் பலரூபங்கள்படைத்து
அவற்றை வணங்குதல் பேதைமையன்றோ?

"கடவுளுக்குக் காணிக்கை செலுத்தினால்
ஒரு கோடி நன்மை'
என்றுரைக்கும் என் அன்பர்களே!
"அதை இல்லாதவர்க்கு அளித்தால்
பல கோடி நன்மை"

இதை அறிவீரா? மாட்டீரா?

அண்டைவாசி!

அவர் என் அண்டைவாசி!
எழுஜென்ம பந்தம்போல் எங்களுறவு!
பட்டினியைப் பகிர்ந்தோம்!
உணவைப் பகிர்ந்தோம்!


செல்வத்தைப் பகிர்ந்தோம்!
செல்வங்களையுமல்லவா பகிர்ந்துள்ளோம்!

ஆம்!

அவர் மகள் என் மருமகள்!
என் மகன் அவர் மருமகன்!

சாபக்கேடு!

மனிதனின் ரத்தத்தை உறிஞ்சும்
கொடூர மிருகம் அரசியல்வாதி

அவனுக்குக் கூஜா தூக்கும்
கேவல மனிதன் கீழ்ஜாதி

லஞ்சம் வாங்கும் சுயநலவாதி
அவனைத்தடுக்க நடுங்கும் பயந்தாங்கொள்ளி

இவர்கள் யாவரும்
இந்நாட்டின் சாபக்கேடு!

Sunday, November 18, 2007

உணர்வில் உதித்த சிந்தனை!

அன்று வியந்திருந்தேன்!
எனை நனைத்தது
மழையா? உன் நினைவா? என்று!
குளிர்த்தது நிலவா? உன் முகமா?
இனித்தது மொழியா? உன் குரலா?
வெண்மைப் பாலா? உன் மனதா?

இன்றும் வியக்கிறேன்!
சுடுவதுத் தீயா? உன் சொல்லா?
கொதிப்பது நீரா? என் மனமா?
கசப்பதுக் காயா? உன் குரலா?
வெளுத்தது நிறமா? உன் குணமா?
இதுக் குழப்பமா? மாற்றமா?
பொய்யெது? மெய்யெது?


ம்........................................
உன் காதல் பொய்!
என் சிந்தை மெய்!
சிந்தித்து....உணர்ந்துக்கொண்டேன்!

எல்லை மீறல்!

உன்னை என்னோடு அழைத்து வந்தேன்
உன் உறைவிடமானேன்
என்னுள் எத்தனை யெத்தனை இன்பங்கள்? !
உறவுகள் சூழக் கொண்டாட்டங்கள்!

இவையாவும் நீடிக்குமென
நான் கண்ட கனவு பொய்த்தது!

எல்லைமீறி உன்னை நான்
என்னோடு நிறைத்திருந்தது குற்றமாம்!
சட்டம் எனை விரட்டியது
நான்மட்டும் தப்பிக்க முயன்றேன்
உனையென் உறவுகளிடமாவது
விட்டு வைக்கலாமென்று எண்ணி
எத்தனைக் காலம்தான் ஒளிவது?

சட்டமுனை என்னிடமிருந்து பறித்துக்கொண்டது!
உனை இழந்த நான்
பிழைக்க வழித்தேடி அலைகிறேன்

பேராசை பெருநஷ்டம் என்பர்!
இன்றுணர்ந்துக்கொண்டேன்...
பணத்தாசைப் பேராசையேன்று!

நேற்று வந்தாய்...
இன்று சென்று விட்டாய்!

நிசப்தம்!

குண்டுகள் துளைத்த உடல்கள்
எங்கள் தெருவெங்கும் சிதறும்
ரத்தம் ஆறென வழிந்தோடும்
குற்றுயிராய்க் கிடக்கும் உடல்களை
மனிதனாக்கப் போராடும் என்னன்பு உள்ளங்கள்!

நாட்கள் சிலவே கடந்தன!
மீண்டும் எங்கள் தெருவில்
வெள்ளமென மழை!
வருணதேவனின் சீற்றத்தால்
வலுவிழந்த என் சகாக்கள்
தென்படவில்லையே! மூழ்கிவிட்டனரோ!
குற்றுயிராய்க் கிடக்கும் உடல்களை
மனிதனாக்கப் போராடும் என்னன்பு உள்ளங்கள்!

இவையாவையும் அறியாதவன்போல்
அமர்ந்திருக்கும் என் இறைவா!
உன் சந்நதியில்மட்டும் ஏன் நிசப்தம்?
கண்டும் காணாமல் இருக்கிறாயே!
நீ கல்லாகிவிட்டதாலா?

நிபந்தனை!

நீ எனக்காகக் காத்திருக்கிறாய்
சுட்டெரிக்கும் சூரியன் தடுத்தாலும் வருவேனென்று
நானறிவேன் என்னன்பே!
நானில்லையெனில் நீ உயிர்த்திருக்க மாட்டாய்!

பேதையே! அதற்காகத்தானே
என் நண்பர்களைத் தூது விட்டேன்
பகைத்துக் கொண்டாயே!

இருப்பினும்...உன்னைத்தேடி
வழியெங்கும் ஓடி
நீ காணுமிடமெல்லாம் தேங்கி
உனக்காகக் காத்திருந்தேனே!

நீயோ...ஒவ்வொரு முறையும்
என்னைப் பாழாக்கி...வீணாக்கி....
இறுதியில் என்னை
ஆவியாக்கி விட்டாய்!

மீண்டும் வருவேன்!
அன்றாவது நான் தங்க ஓரிடம் தருவாயா?
மறுப்பாயெனில்...
இனி என்றும் உனைக் காண
நான் வருவதாக இல்லை!

மனிதனுக்கு மழை விதிக்க வேண்டும்
இப்படி ஒரு நிபந்தனை!